

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த 3 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரைச் சேர்ந்தவர்கள் குமார் (24), லோகேஷ் ராஜ் (22), கௌதம் (22). இவர்கள் மூவரும் தருமபுரியில் நடந்த நண்பரின் திருமணத்திற்குச் சென்று விட்டு, பழனி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில், சென்னிமலை-காங்கயம் சாலையில், நல்லிக் கவுண்டன் வலசு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக இவர்கள் வந்த கார் திடீரென நிலைதடுமாறி, சாலையோர புளியமரத்தில் மோதியது.
இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த மூவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.