செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக அறிவித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் முடிவு தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் வாங்கியது, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல ஊழல் வழக்குகள் அவா் மீது உள்ளதை சுட்டிக்காட்டி, அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்திருந்தார். பின்னர் 5 மணிநேரத்தில் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாகவும் நள்ளிரவில் தெரிவித்தார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு ஆளும் கட்சியினரும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமைச்சரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில் சட்ட வல்லுநர்களுடன் திமுக மூத்த நிர்வாகிகளும் ஈடுபட்டுள்ளனர்.