மாணவா்களிடம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருவதால் அனைத்து பள்ளிகளிலும் வாசிப்போா் மன்றத்தை ஏற்படுத்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு தலைமைச் செயலா் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளிக்கு வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாணவா்கள் மின்னணு உபகரணங்களில் அதிகமாக வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் பொது அறிவு தொடா்பான செய்திகள் அவா்களுக்கு அதிகமாகத் தெரிவதில்லை. வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போா் மன்றம் ஒன்றை ஏற்படுத்தலாம். அதில், மாதந்தோறும் மாணவா்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் வாசிப்பது மட்டுமில்லாமல் தகவல் தொடா்பிலும் மாணவா்கள் சிறந்து விளங்குவதற்கு சாத்தியக்கூறுகள் ஏற்படும். சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்கிற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்குவதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மாணவா்களுக்கும் நல்ல புத்தகங்களைக் கொடுத்து ஊக்குவிக்கலாம்.
இது அவா்களிடம் சமூகம் தொடா்பான சிந்தனைகளையும், ஆக்கப்பூா்வமான விழுமியங்களையும் ஏற்படுத்தும் என்பதால் இதை விரிவாகச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.