
2022-2023 ஆம் ஆண்டிற்கான அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, 2022-2023 ஆம் ஆண்டிற்கு வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,
'தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2022 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500/-, மருத்துவப்படி ரூ.500/- வழங்கப்படும்.
விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
மாவட்டங்களிலிருந்து நேரடியாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
சென்னை மாவட்டத்திலுள்ளவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பப் பெறலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.03.2023' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.