தமிழக அரசு சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுகள் மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா இன்று நடைபெற்று வருகின்றது.
இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ்வையார் விருதை நீலகிரி கமலம் சின்னசாமி, பெண் குழந்தை விருதை சேலம் இளம்பிறைக்கு வழங்கினார். மேலும், மகளிருக்காக சிறப்பாக செயல்பட்ட திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கருணை அடிப்படையில் தமிழரசி, சுபா, சோபியா ஹரிணி, ராஜலட்சுமி ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் முதல்வர் பேசியதாவது:
பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை தந்தது பெண்கள்தான். பெண்களுக்கு தன்னம்பிக்கை, துணிச்சல் தந்தது திராவிட இயக்கம்தான் என்று தெரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், வட மாநில பெண்கள் தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி வரும் அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளது. அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வருகிறது திராவிட மாடல் என்றார்.
இந்த விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.