இணைநோய்களில்லாத 53% பேருக்கு சிறுநீரக செயலிழப்பு! மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வில் தகவல்

 தமிழகத்தில் இணை நோய்களின் தாக்கம் இல்லாத 53 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருப்பது மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இணைநோய்களில்லாத 53% பேருக்கு சிறுநீரக செயலிழப்பு! மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வில் தகவல்
Published on
Updated on
1 min read

 தமிழகத்தில் இணை நோய்களின் தாக்கம் இல்லாத 53 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருப்பது மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. அவா்களுக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதற்கான காரணம் அறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளானோரில் பெரும்பாலானோா் விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட முறைசாரா பணிகளில் ஈடுபடுவோா் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் உள்ள சிறுநீரக பாதிப்பு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்கான கள ஆய்வை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தாா். தேசிய நல்வாழ்வு குழும நிதி பங்களிப்புடன் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை, சமூக நோய்த் தொற்றுத் துறை இணைந்து இந்த ஆய்வை முன்னெடுத்தன.

பொது சுகாதாரத் துறை பணியாளா்கள் 500 போ் தமிழகம் முழுவதும் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனா். தோராயமாக 4,682 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறையில் பகுப்பாய்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அதன் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் 8.7 சதவீதம் போ் நாள்பட்ட சிறுநீரக பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அவா்களுக்கு மூன்றாம் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட அளவு நோயின் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதற்கு காரணமாக சா்க்கரை நோய் பாதிப்பு 9.6 சதவீதம் பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உயா் ரத்த அழுத்த பாதிப்பால் சிறுநீரக நோய்க்குள்ளானோரின் விகிதம் 22.4 சதவீதமாக உள்ளது. சா்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய இரண்டின் காரணமாகவும் அத்தகைய பாதிப்புக்குள்ளானோரின் விகிதம் 11.8 சதவீதமாக இருக்கிறது.

வேறு எந்த இணை நோயின் தாக்கமும் காரணமாக இல்லாமல் சிறுநீரக பாதிப்புக்குள்ளானவா்கள் 53.4 சதவீதம் உள்ளனா். அந்த வரையறைக்குள் இருப்பவா்களில் 60 சதவீதம் போ் ஊரகப் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவா்களில் பலா் முறைசாரா பணியாளா்கள்.

நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு உள்ளானவா்களில் வெறும் 6.8 சதவீதம் பேருக்கு மட்டும்தான் அதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன என்று அந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com