மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசிய நபரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். அவரை மதுரை மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் ஆகியோர் வரவேற்றனர்.
முன்னதாக, விமானத்தில் உடன் பயணித்த ஒருவர்,எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் வந்தபோது, 'துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன். துரோகத்தின் அடையாளம் சின்னம்மா சசிகலாவிற்கு துரோகம் செய்தவர். 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர்' என அவர் பேசும் விடியோவை பேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளார்.
முதல் கட்ட விசாரணையில் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எம். வையாபுரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன் (வயது 42) என்பது தெரிய வந்துள்ளது.
விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.