மணப்பாறை: மணப்பாறை அடுத்த குளத்தூராம்பட்டி புனித அந்தோணியர் பொங்கல் விழாவினை முன்னிட்டு புனித சூசையப்பர் பேராலயத்திடலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. சுமார் 700 காளைகளும், 300 காளையர்களும் களம் காணுகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த குளத்தூராம்பட்டியில் புனித அந்தோணியர் பொங்கல் விழாவினை முன்னிட்டு புனித சூசையப்பர் பேராலயத்திடலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசிக்க, வீரர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து கொடியசைத்து போட்டியினை அமைச்சர் தொடக்கி வைத்தார்.
பங்கு தந்தை ஆரோக்கிய பன்னீர் செல்வம் சிறப்பு பிராத்தனைக்கு பின் அவிழ்க்கப்பட்ட உள்ளூர் கோயில் காளைகளைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசிக்க, வீரர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிக்க | தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி!
சுமார் 700 காளைகளும், 300 காளையர்களும் களம் காணுகின்றனர். வாடிவாசலில் சீறி பாய்ந்த காளைகளை காளையர்கள் திமில் பிடித்து தழுவி வருகின்றனர். சில காளைகள் காளையர்களின் பிடியில் சிக்காமல் ஆடுகளத்தில் களம் கண்டு வருகின்றன.
காளைகளை பிடித்த வீரர்களுக்கும், காளையர்களின் கைகளில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கம், சைக்கிள், கட்டில், பாத்திரங்கள் என பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியினை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.