வேலூர்: தமிழக-ஆந்திர எல்லையோரம் ஆந்திரா பகுதியில் குடியாத்தம்- பலமனேரி சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் , தமிழக-ஆந்திர எல்லையில் சைணகுண்டா சோதனை சாவடி அருகே ஆந்திர எல்லை பகுதியான மொசலமடுகு பகுதியில் குடியாத்தம்-பலமனேரி சாலை வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சாலையை கடந்துள்ளது. அப்போது குடியாத்தம் - பலமனேரி சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி தங்கள் செல்போனில் விடியோவாக பதிவு செய்துள்ளனர்.
அந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும், வனப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் யானைகளை சாலைக்கு வரவிடாமல் காட்டுக்குள் விரட்டினர்.