ஒகேனக்கல் வனப்பகுதியில் சாலையோரம் நின்ற ஒற்றை யானையிடம் மது போதையில் இருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், அருகில் சென்று ஆபத்தை உணராமல் தாக்க முயற்சி செய்தபோது, யானை மிரண்டு மீண்டும் சுற்றுலா பயணியை தாக்க முயற்சி செய்து வனப் பகுதிக்குள் சென்றது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை தண்ணீர் தேடி அவ்வப்போது பென்னாகரம் - ஒகேனக்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் வால்வுகளில் இருந்து வெளியேறும் நீரை குடித்துவிட்டு சாலையின் அருகில் நிற்பது வழக்கம்.
தற்போது ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கோடை விடுமுறையை கொண்டாட நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில், பென்னாகரத்தில் இருந்து 11 கிலோமீட்டர் அடர் வனப்பகுதிக்குள் செல்லும்போது சாலையோரம் நிற்கக்கூடிய யானையை கண்டதும் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை சாலையோரம் நின்றதை கண்ட சுற்றுலாப் பயணி ஒருவர், மது போதையில் யானைக்கு மிக அருகில் சென்று நின்ற போது, ஒற்றைக் காட்டு யானை சுற்றுலா பயணியை தாக்க முயற்சி செய்து வனப் பகுதிக்குள் சென்றது.
ஒகேனக்கல் வனப்பகுதியில் ஒற்றை யானை மிரட்டுவது தொடர்கதையாகி வரும் நிலையில், மாவட்ட வன அலுவலர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என வன உயிரின ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.