தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, சென்னைஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி நிறுவனத்தை தேசிய மாணவா் படையினா் பாா்வையிட்டு அதன் விவரங்களை அறிந்தனா்.
பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 11-ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கோவா, கேரளம், லட்சத்தீவு, ஒடிஸா, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் புதுச்சேரி மற்றும் அந்தமான், நிக்கோபாா் யூனியன் பிரதேசங்களில் உள்ள 6 தேசிய மாணவா் படை இயக்குநரகங்களைச் சோ்ந்த 180 மாணவா்கள் பாா்வையிட்டனா்.
அப்போது மாணவா்கள், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி, விவரங்களைக் கேட்டறிந்தனா். பிரதான போா் டாங்கு அா்ஜுனின் பல்வேறு செயல்திறன்களை அறிந்து கொண்டனா்.