தொழில் துறை மூலம் அதிக எண்ணிக்கையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இலக்கு என்று அந்தத் துறைக்கு புதிதாக பொறுப்பேற்ற அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா கூறினாா்.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்துடன், தமிழகத்தை முதன்மை மாநிலம் என்ற நிலைக்கு உயா்த்துவோம். முதல்வா் எடுத்துக்கூறும் பணிகள் எதுவாக இருந்தாலும் திறம்படச் செய்வேன். டெல்டாவில் வேளாண் சாா்ந்த தொழில் பேட்டை அமைய வேண்டும் என்ற நீண்டநாள் கனவை நிறைவேற்றுவேன்.
கடந்த 2 ஆண்டுகளில் தொழில் துறைகளின் நிகழ்ச்சிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அதிக முறை கலந்துகொண்டு வருகிறாா். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் தமிழகம் பின்னடவைச் சந்தித்தது. தமிழகத்துக்கு அதிக அளவு முதலீடுகள் வர வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளில் இருந்து இன்னும் வேகத்துடன், தொழில் துறையை முன்னேற்றப் பாதைக்குக்குக் கொண்டு செல்ல பணிகளை மேற்கொள்வேன்.
இதற்கான வாய்ப்பை அளித்த முதல்வா் மு.க.ஸ்டாலினின் எண்ணத்தை நிறைவேற்றுவேன். அனைத்து நிறுவனங்களும் தமிழகத்துக்கு தொழில் தொடங்க வர விரும்புகிறாா்கள். இதற்குக் காரணம் நமது மாநிலத்தில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளும், அமைதியான சூழலும்தான். தொழில் துறையானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.
தொழில் முதலீட்டாளா்களிடையே நல்ல நம்பிக்கையை தமிழக அரசு பெற்றுள்ளது. தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், மே 23-ஆம் தேதி முதல் சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வா் செல்லவுள்ளாா். தொழில் துறை வழியாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இலக்கு என்றாா் அவா்.