சென்னை: உலக செவிலியர் நாளையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு, பொறுமையுடன் ஆற்றும் அரும்பணிதான் செவிலியர் பணி.
நோயாளிகளைக் காப்பாற்ற மருந்து இருந்தால் மட்டும் போதாது. நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் வேண்டும். எனவே, செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள். தற்போது ஆண் செவிலியர்களும் இந்த பணியில் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அனைத்துத் தரப்பினருக்கு சிறந்த முறையில் மருத்துவம் கிடைத்திட உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய செவிலியர் வாரியம் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தேவையான செவிலியர் பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு மதிமுக சார்பில் செவிலியர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.