கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம்விசாரித்தார்.
மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனா்.
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 11 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்,முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் 34 பேரையும் தனித்தனியாக சந்தித்து நலம்விசாரித்தார்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்கக் கோரி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.