சேலம்: ஏற்காடு பிரதான சாலையில் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கோடை விழா முடியும் வரை ஒரு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தியில், ஏற்காடு மலைப்பாதையின் 2 ஆவது கொண்டை ஊசி வளைவில் நடைபெற்று வந்த சாலை சீரமைப்புப் பணி முழுமையாக நிறைவடைந்ததையொட்டி இன்று சனிக்கிழமை (மே 20) பிற்பகல் 2 மணி முதல் அஸ்தம்பட்டி - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்வதற்கு இரண்டு சக்கர, இலகுரக மற்றும் கனரக வாகனம் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் அனுமதிக்கப்படுகிறது.
மேலும், ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியையொட்டி ஒருவழிப் பாதையாக அஸ்தம்பட்டி - கோரிமேடு வழியாக ஏற்காட்டிற்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் கோடை விழா முடிவடையும் வரை ஏற்காடு - குப்பனூர் சாலை வழியாக மட்டும் கீழிறங்கும் வகையில் ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ன மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.