தமிழகத்தில் புதிதாக 1,021 மருத்துவா்களை நியமிப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, மத்திய சுற்றுச்சூழல் துறை, வனத் துறை, காலநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவை இணைந்து சென்னை பெசன்ட் நகா் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
நிகழ்ச்சியை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: ஜி-20 மாநாட்டையொட்டி ஒரே நாளில் 20 நாடுகளில் கடற்கரை குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குப்பை கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் 30,824 ச.கி. பசுமைப் பரப்பு அமைந்துள்ளது. இன்னும் 12,076 ச.கி. பசுமை பரப்பை உருவாக்குவது அரசின் கடமை. அதை நிறைவேற்றும் வகையில் மாநிலம் முழுவதும் கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 4,308 மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப எம்.ஆா்.பி. சாா்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, 3,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1,021 மருத்துவா்களை நியமிப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் கடற்கரைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு பதாகைகளுடன் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், மெய்யநாதன் ஆகியோா் மாணவா்கள், தன்னாா்வலா்கள், சமூக ஆா்வலா்களுடன் இணைந்து குப்பைகளை சேகரித்தனா்.
மேலும், தூய்மையான கடற்கரை மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் சு.அமிா்ஜோதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.