அதிமுக முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி, புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.35.79 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடந்த நிலையில் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கே.பி.அன்பழகன், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.45.20 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கே.பி.அன்பழகன், மனைவி மல்லிகா, மகன் சசிமோகன், சந்திரமோகன் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கே.பி.அன்பழகன் மீதான வழக்கில் 10,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளது.