கரூர்: கரூர் அருகே மாந்தோப்பில் கணவன் மனைவி கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த ஓடையூர் பகுதியில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் கடந்த 15 ஆண்டுகளாக தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்த கணவன் மனைவியான தங்கவேல் (65), மைதிலி (61) ஆகிய இருவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை தோட்டத்து வீட்டில் தம்பதியர் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தலை மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர், மோப்பநாய் உதவியுடன் வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.