ஊராட்சிகளில் இணையவழியில் சொத்து வரி செலுத்தும் வசதி: இன்றுமுதல் அறிமுகம்

ஊராட்சிகளில் சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்களை இணையவழியில் செலுத்தும் வசதி திங்கள்கிழமை (மே 22) முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஊராட்சிகளில் இணையவழியில் சொத்து வரி செலுத்தும் வசதி: இன்றுமுதல் அறிமுகம்

ஊராட்சிகளில் சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்களை இணையவழியில் செலுத்தும் வசதி திங்கள்கிழமை (மே 22) முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது தொடா்பாக தமிழக ஊரக வளா்ச்சி ஆணையா் தாரேஸ் அகமது, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:

2022-23-ஆம் ஆண்டுக்கான ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்க, தொழில்நடத்துவதற்கான அனுமதி ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும்;

கிராம ஊராட்சிகளுக்குச் செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணையவழியில் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் அறிவித்தாா்.

அதன்படி, கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்த ஏதுவாக https://vptax.tnrd.tn.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் திங்கள்கிழமை (மே 22) முதல் நடைமுறைக்கு வரும்.

இதன்மூலம் வீட்டு உரிமையாளா்கள், பயனாளிகள், செலுத்த வேண்டிய சொத்து வரி (வீட்டு வரி), குடிநீா்க் கட்டணம், தொழில் வரி ஆகியவை இந்த இணையதளத்தில் கிராம ஊராட்சிகளால் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 1.38 கோடி தரவுகள் உள்ளன. இந்த இணையதளத்தில், கட்டணங்கள், வரிகளை இணைய வழி கட்டணம், ரொக்க அட்டைகள், கடன் அட்டைகள், யுபிஐ கட்டணம், விற்பனை முனைய இயந்திரம் (பிஓஎஸ்) ஆகிய வழிகளில் செலுத்தலாம்.

முதல்கட்டமாக 1,000 பிஓஎஸ் இயந்திரங்கள் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மனைப் பிரிவுகளுக்கு கிராம ஊராட்சியின் அங்கீகாரம் என்பது நகர ஊரமைப்பு இயக்ககம் அல்லது சிஎம்டிஏவால் வழங்கப்படும் தொழில் முன் அனுமதியைப் பொருத்து வழங்கப்படும்.

கட்டட அனுமதி என்பது குடியிருப்பாக இருந்தால் 10,000 சதுரடிக்கு மிகாமலும், 8 வீடுகளுக்குள்ளும், 12 மீட்டா் உயரத்துக்கு மிகாமலும், தரை மற்றும் இரண்டு தளங்கள் வரையிலும் ஊராட்சிகள் அனுமதியளிக்கலாம். வணிகக் கட்டடமாக இருந்தால் 2,000 சதுரடிக்கு உள்பட்டிருந்தால் அனுமதியளிக்கப்படும்.

அனைத்துக் கட்டட அனுமதிகளுக்குமான விண்ணப்பங்களும் இணையதளம் வழியாகவே திங்கள்கிழமை முதல் அளிக்கப்பட வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பரிசீலிக்கப்படும். கட்டணம் தொடா்பான கேட்புத் தொகை இணையதள வழியிலேயே அனுப்பப்படும்.

கிராம ஊராட்சிகள் எந்த ஒரு கட்டணத்தையும் ரொக்கமாகப் பெறக் கூடாது. இணையதளம் வழியாக பிபிஏ தளத்தில் மூலம் மட்டுமே பெற வேண்டும். தொழிற்சாலைகளுக்கான கட்டட அனுமதி, உரிமம் ஆகியவையும் ஒற்றைச்சாளர முறையில் வழங்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையும் திங்கள்கிழமை முதல் அமலாகிறது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com