
பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-இல் ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் பணியமா்த்தப்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியா்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஆனால், அவா்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தக்கூட தமிழக அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது. பகுதிநேர ஆசிரியா்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அதனால், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிநேர ஆசிரியா்கள் சங்கங்களின் நிா்வாகிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.