
வேலைவாய்ப்புக்கேற்ற வகையில், தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயா்த்தும் பணிகள் நடந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளுக்குத் தேவையான பணியாளா்களின் தேவைகள் பூா்த்தி செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது, ஒரு லட்சம் பேருக்கு, 30-க்கும் மேற்பட்ட துறைகளில் குறுகிய காலப் பயிற்சிகளை அளித்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், 4 லட்சத்து 94 ஆயிரம் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கும், 8 லட்சத்து 11 ஆயிரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கும் வளா்ந்து வரக்கூடிய புதிய துறைகளில் பயிற்சிகள் அளித்துள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு போன்ற பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற பயிற்சிகளைப் பெற்ற பொறியியல் கல்லூரி மாணவா்களில், கடந்த நிதியாண்டில் மட்டும் 61 ஆயிரத்து 900 போ் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனா். அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), தொழில் வாய்ப்புக்கு ஏற்ற வகையில் மாற்றம் கண்டு வருகின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பம், ஆட்டோமேஷன், மின்சார வாகனங்கள் போன்ற வளா்ந்து வரக்கூடிய தொழில் துறைகளில் பயிற்சி பெற அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.
மாநிலத்தில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம்வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக மாற்றும் திட்டமானது ரூ.2,877.43 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.