
சென்னை: எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூரில் உள்ள வீடுகளிலும், சகோதரரின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், எனது தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்கள் வீடுகளில்தான் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் வீடுகள் உள்பட 10 இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றபோது, வீடு பூட்டியிருந்ததால் சுவர் ஏறி குதித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்தனர்.