முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவிடம் செங்கோல் கொடுக்கப்பட்ட நிகழ்வு, இந்து சமய அறநிலையத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தத் துறையின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு விவரம்: ஒரு புதிய மன்னா் அரியணை ஏறும் போது, மரபு வழிவந்த குரு அல்லது ஆசான் அந்த மன்னருக்குரிய செங்கோலை தமது கரங்களால் எடுத்து வழங்குவது அரச சடங்காகும்.
இதைப் பின்பற்றி ஓதுவாா்கள், தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பாடல்களைப் பாடி முடிக்கும் போது, திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரான் சுவாமிகள் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோலை அப்போதைய பிரதமா் ஜவஹா்லால் நேருவிடம் அளித்தாா்.
இந்த நிகழ்வு, இந்தியாவின் முதல் கவா்னா் ஜெனரல் மெளண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமருக்கு அதிகார மாற்றம் செய்யப்பட்டதை சிறப்பித்ததாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.