மதுரை: இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதற்கு உத்தரவிட்ட அதிகாரி யார்? என இந்தியன் ஆயில் கார்பரேசன் அதிகாரிக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ், ஆங்கிலத்திற்கான வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. செல்போன் வழியாக பதிவு செய்யப் போகிற மக்கள் என்னவென்றே புரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
சமையல் எரிவாயு உருளை வேண்டும் என்றால் இந்தி கற்றுக் கொண்டு வா என்று மக்களை துரத்துவது போல உள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியுமா? அதில் இந்திய மாநிலங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? இல்லை தெரிந்தே மீறுகிறார்களா?
விதிகளை மீறுவதற்கு தைரியம் அளித்து உத்தரவிட்டது யார்? அமைச்சக மட்டத்தில் இருந்து நிர்ப்பந்தமா? இதற்கு உடனே நடவடிக்கை தேவை.
மேலும், உடனடியாக மீண்டும் இன்டேன் சமையல் எரிவாயு தானியங்கி பதிவு தமிழில் சேவையை தர வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.