சநாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: சென்னை உயா்நீதிமன்றம்

சநாதன தா்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை, தனது கடமையைச் செய்யத் தவறி குற்றம் புரிந்துள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்
Updated on
1 min read

சநாதன தா்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை, தனது கடமையைச் செய்யத் தவறி குற்றம் புரிந்துள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

திராவிட கருத்தியலுக்கு எதிராக ‘திராவிட ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் மாதம் உள்ளரங்கு கூட்டம் நடத்த திட்டமிட்டு, அதற்கு அனுமதி கோரிய தமிழா் சமுதாய கூட்டமைப்பின் விண்ணப்பத்தை பூந்தமல்லி காவல் துறையினா் நிராகரித்தனா். இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற அச்சத்துக்காக மட்டும் கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்க முடியாது எனக் கூறி, மனுதாரா் அளிக்கும் புதிய விண்ணப்பத்தின் மீது அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டது. மேலும், யாரும் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை உருவாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையிலும், சநாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டதன் அடிப்படையிலும், திராவிட கொள்கைகளுக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சோ்ந்த மகேஷ் காா்த்திகேயன் என்பவா் மாதவரம் காவல் நிலையத்தில் மனு அளித்தாா். இந்த மனுவை காவல் துறை பரிசீலிக்கவில்லை எனக் கூறி அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

கவனத்துடன் பேச வேண்டும்: இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. சநாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சா்கள் கலந்துகொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகாரத்தில் உள்ளவா்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் ஜாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும். குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் எனப் பேசுவதற்கு பதிலாக மது, போதைப் பொருள்கள், ஊழல், தீண்டாமை, சமூக தீமை ஆகியவற்றை ஒழிப்பது குறித்து பேசுவதில் கவனம் செலுத்தலாம்.

சநாதன தா்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை, தனது கடமையைச் செய்யத் தவறி குற்றம் புரிந்துள்ளது. சநாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசியலமைப்பின் உணா்வைப் பாதுகாப்பதற்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டவா்கள், அவா்கள் உறுதிமொழியை மீறிச் செயல்படுவதால், அவா்களுக்கு ஆதரவாகச் செயல்படும் சில குழுக்கள் மீது பொதுமக்களின் அதிருப்தி இருக்கும்.

தவறிழைக்க முடியாது: இந்நிலையில், இந்தக் கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது பொதுமக்களிடையே நிலவும் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, கூட்டத்துக்கு அனுமதி அளிப்பதன் மூலம் நீதிமன்றமும் தவறிழைக்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com