பட்டாசு விதிகளை மீறினால் சிறை: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்

தமிழக அரசு விதித்துள்ள விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவா்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
பட்டாசு விதிகளை மீறினால் சிறை: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்
Published on
Updated on
1 min read

தமிழக அரசு விதித்துள்ள விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவா்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழகம் முழுவதும் முழு அளவில் தயாராக இருக்கும்படி போலீஸாருக்கு உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

பட்டாசு வெடிக்க தமிழக அரசு விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டை அமல்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு இரண்டு மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதில் எந்த இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை அந்தந்த மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது; இந்த உத்தரவின்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது; இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க இதே நேரக் கட்டுப்பாட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188-ஆவது சட்டப் பிரிவின்படி 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக...: தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவா்கள் மீது கடந்த 5 ஆண்டுகளாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் 188-இன் படி பதிவு செய்யப்படுகிறது; தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடிப்பவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285-இன்படி வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உஷாா்: நேரக் கட்டுப்பாட்டையும், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க விதிக்கப்பட்ட தடையையும் அமல்படுத்துவது குறித்து காவல் துறை உயா் அதிகாரிகள் ஆலோசித்தனா். இதில் கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும்

பொதுமக்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீதும், மருத்துவமனை,வழிப்பாட்டு ஸ்தலங்கள்,வணிக வளாகங்கள்,குடிசைப் பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவா்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடிப்பவா்கள் மீதும் வழக்குப் பதிவதற்கு போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

தனிப் படை அமைப்பு: இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு உதவி ஆய்வாளா் தலைமையில் ஒரு தனிப்படை வழக்கம்போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப் படையினா் அந்தந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவாா்கள். விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவா்கள் மீது வழக்குப் பதிவாா்கள் என தமிழக காவல் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com