கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் இரண்டாவது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நவ.27-ம் தேதி இரவு 200 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு தனிப்படை பாலக்காடு பகுதியிலும், மற்றொரு தனிப்படை பொள்ளாச்சி பகுதியிலும் முகமிட்டுள்ள நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடையில் பதிவாகியுள்ள கைரேகைகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய பொழுது இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பழைய குற்றவாளிகள் கிடையாது என்பது தெரியவந்துள்ளது.
மேலும், நகைகளை தேர்வு செய்து திருடி இருப்பதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் புதிய கொள்ளையராக இருப்பார் என்பதும் விசராணையில் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.