நிறுத்தப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் மீண்டும் விரைவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று சட்டப்பேரவையில் வேடசந்தூர் திமுக எம்எல்ஏ காந்தி ராஜன், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,
'கடந்த அதிமுக ஆட்சியில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஆட்களை பணியமர்த்தாத காரணத்தினால் பல வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
தற்போது போக்குவரத்துத் துறை சார்பாக 685 ஓட்டுநர், நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
எனவே, பல்வேறு வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் அந்த வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்' என்றார்.