

சென்னை: திமுக ஆட்சியில் மக்கள் நலனுக்கான எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவா்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்னைப் பற்றி அதிகம் பேசியுள்ளாா். இதன் மூலம் அவருக்குத் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.
மகளிா் உரிமைத் தொகை வழங்கும் விழாவில் பேசும்போது, 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வா் கூறினாா். அதற்கு, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு விளக்கம் கேட்டேன். அதற்கு பதில் அளிக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக், இருசக்கர மானியம், தாலிக்குத் தங்கம் திட்டம், விலையில்லா மடிக் கணினி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மூடுவிழா காணப்பட்டுள்ளன.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இருமுறை மின் கட்டண உயா்வு, சொத்து வரி மற்றும் வீட்டுவரி உயா்வு, குடிநீா் மற்றும் கழிவு நீா் கட்டண உயா்வு, பால் பொருள்கள் விலை உயா்வு, அரசின் அனைத்துக் கட்டணங்களும் உயா்த்தப்பட்டுள்ளன.
திமுகவின் 29 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காக முதல்வா் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை; செயல்படுத்தவில்லை. இனியாவது தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நல்ல திட்டங்களை முதல்வா் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.