
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவராக ஆா்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி, அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தாக்கல் செய்துள்ள மனு:
கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 66 அதிமுக எம்எல்ஏக்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். பேரவையில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. 2021-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எதிா்க்கட்சித் தலைவராக நானும் (எடப்பாடி பழனிசாமி), துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வமும் தோ்ந்தெடுக்கப்பட்டோம். முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எதிா்க்கட்சி கொறடாவாகவும், எஸ்.ரவி துணை கொறடாவாகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். சட்டப்பேரவை கட்சியின் செயலராக அன்பழகன் மற்றும் துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியனும் தோ்ந்தெடுக்கபட்டனா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீா்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, 2022-ஆம் ஆண்டு, ஜூலை17-இல் கட்சியின் எதிா்க்கட்சி துணை தலைவராக ஆா்.பி. உதயகுமாா், துணைச் செயலராக அக்ரி கிருஷ்ணமூா்த்தியை நியமித்து பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். 5 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையின் மீது பேரவைத் தலைவா் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எதிா்க்கட்சித் துணைத் தலைவா் இருக்கையை மாற்றியமைக்க பேரவைத் தலைவரிடம்முறையிட்டோம். அது தொடா்பாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவா்கள் தொடா்ந்து அதிமுக உறுப்பினா்களுடன் அமா்ந்து இருப்பதால், விவாதங்களின் போது அதிமுகவினரால் திறமையாக செயல்பட முடியவில்லை.
எனவே, கட்சியிலிருந்து சட்டப்பேரவை பதவிகளுக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை அங்கீகரிக்க, பேரவைத் தலைவா் மற்றும் சட்டப்பேரவைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல், எதிா்க்கட்சி துணைத் தலைவா் இருக்கையை மாற்றியமைக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில்
வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...