
ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையை அதிமுக உறுதியாக ஆதரிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற நடைமுறையைக் கொண்டவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து இன்று உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிம் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க- சீமானுக்கு காவல்துறையினர் சம்மன்
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையை அதிமுக உறுதியாக ஆதரிக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பபை வலுப்படுத்தும். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளச்சியே முக்கியமாக இருக்கும். எந்த அரசும் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு நீண்டகால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும்.
நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்பதுடன், அரசியல் ஸ்திரத்தன்மையைத் தவிர்க்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை தேர்தல் நேரம், பெரும் செலவை மிச்சப்படுத்தும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...