
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ் (55) கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பணியில் இருந்தபோது மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மணல் கொள்ளையை தடுத்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொலை தொடா்பாக, கலியாவூரைச் சோ்ந்த ராமசாமி மகன் ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு (41), முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் முறப்பநாடு போலீஸாா் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனா்.
கொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ்
இதையும் படிக்க | சனாதன விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
இது தொடர்பான வழக்கில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை தினமும் மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
அதன்படி, விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிகள் ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...