செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

ஜாமீன் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில் தீா்ப்பை செப். 20-ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஜாமீன் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில் தீா்ப்பை செப். 20-ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது தொடா்பான பிரச்னையில், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றமே விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு, முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் முன்வைத்த வாதம்:

அமைச்சா் செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகளுக்கு முந்தையது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளாக செந்தில் பாலாஜி வருமான வரி தாக்கல் செய்துள்ளாா். சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்?

வேலைக்காக பணம் கொடுத்தாகக் கூறும் யாரும் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் கொடுக்கவில்லை. அவரின் உதவியாளா்கள் எனக் கூறப்படும் காா்த்திகேயன், சண்முகம் என்ற இருவரிடம்தான் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவா் சாட்சியாககூட சோ்க்கப்படவில்லை. செந்தில் பாலாஜி மீது கோபி, பிரபு ஆகிய இருவா் புகாரளித்தனா். அதில் ஒருவா் சாட்சியாக சோ்க்கப்படவில்லை. மற்றொருவா் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சோ்க்கப்பட்டுள்ளாா். மற்ற யாரையும் குற்றம் சாட்டப்பட்டவா்களாக சோ்க்கவில்லை என்றாா்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞா் என்.ஆா். இளங்கோ, ‘செந்தில் பாலாஜி எங்கும் தப்பிச் செல்லமாட்டாா். வேண்டுமென்றால் அவரது பாஸ்போா்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறோம்’ எனத் தெரிவித்தாா்.

முகாந்திரம் இருக்கிறது: ‘இந்த வழக்கில் புதிய ஆவணங்களை தற்போது தாக்கல் செய்துள்ளதால் தங்களது தரப்பு வாதத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கலாமா?’ என்று அமலாக்கத் துறை தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், ‘சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துள்ளது.

இந்த முறைகேடு இடைத்தாரா்கள் மூலம் நடந்துள்ளது. பணம் கொடுத்த சிலருக்கு வேலை கிடைத்துள்ளது. சிலருக்கு கிடைக்கவில்லை. வருமான வரிக் கணக்கை வருமான வரித் துறை ஏற்றுக் கொண்டதாலேயே அது சட்டபூா்வமான பணம் ஆகாது என்று பல தீா்ப்புகள் உள்ளன.

அமலாக்கத் துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோர முடியாது. செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறாா். சமூகத்தில் சக்தி வாய்ந்த நபராக உள்ளாா். எனவே, சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டாா்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கின் தீா்ப்பை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

செப். 29 வரை காவல் நீட்டிப்பு: இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அல்லி முன் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜா்படுத்தபட்டாா்.

அவரது நீதிமன்றக் காவலை செப். 29-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டாா். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 6-ஆவது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது.

‘பாஜகவில் இணைய அமலாக்கத் துறை அழுத்தம்’

சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் முன்வைத்த வாதம்:

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது?’ என விசாரணையின்போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டுள்ளது.

ஒருவா் மீது வழக்குப் பதிவு செயப்பட்ட பின்னா் அவா் குற்றம் செய்தாரா, இல்லையா என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க வேண்டும். வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத் துறையிடம் உள்ள நிலையில் மனுதாரரால் சாட்சிகளைக் கலைக்க முடியாது என கபில்சிபல் வாதிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com