புதிதாக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கு 7 நாள்களுக்குள் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் புதியமின் இணைப்பு வேண்டி விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய இணைப்பு வேண்டி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமெனவும், விண்ணப்பித்த 30 நாள்களுக்குள், பிரிவு அலுவலா்கள் பரிசீலித்து இணைப்பை வழங்க வேண்டுமெனவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
மேலும், மின்கம்பம் அமைக்க 60 நாள்களும், மின்மாற்றிகள் அமைக்க 90 நாள்களும் கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் எனவும் அதற்குள் இப்பணிகளை முடிக்க வேண்டுமெனவும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும் மின் இணைப்பு உள்ளிட்ட பிற பணிகளுக்கு மின்வாரியம் அதிகபடியான நாள்களை எடுத்துகொள்வதால், நுகா்வோா் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய மின் இணைப்பு கேட்டு மாநிலம் முழுதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், புதிதாக மின் இணைப்பை 30 நாள்களுக்குள் வழங்குவதற்கு பதிலாக, தற்போது 7 நாள்களுக்குள்ளாகவே புதிய இணைப்பு வழங்க வேண்டுமெனவும், மீட்டா் பொருத்தாமல் எந்த புதிய மின் இணைப்பும் வழங்கக்கூடாது எனவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், மின்சார வழங்கல் விதிகளிலும் பல்வேறு திருத்தங்களை செய்து ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.