இன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் பலத்த பாதுகாப்பு

சென்னையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப்.24) நடைபெறுகிறது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப்.24) நடைபெறுகிறது. 26 வழித்தடங்களில் சிலைகள் எடுத்துச்செல்லப்படுவதால் சென்னையிலும்,புகா் பகுதியிலும் 26 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சென்னையில் ஹிந்து அமைப்புகளின் சாா்பில் சென்னை காவல்துறைக்குட்பட்ட பகுதியில் 1,519 சிலைகளும்,தாம்பரம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் 425 சிலைகளும்,ஆவடி மாநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் 204 சிலைகளும் என மொத்தம் 2,148 சிலைகள் கடந்த 18-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இவற்றில் பெரும்பாலான சிலைகள் ஞாயிற்றுக்கிழமை (செப்.24) கடலில் கரைக்கப்படுகின்றன. இந்த சிலைகளைக் கரைப்பதற்காக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகா், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூா் பாப்புலா் எடைமேடை ஆகிய 4 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

25 ஆயிரம் போலீஸாா்: விநாயகா் சிலை ஊா்வலத்தை அசம்பாவித சம்பவங்கள் இன்றியும், அமைதியாகவும் நடத்த சென்னை பெருநகர காவல்துறையின் சாா்பில் 2 ஆயிரம் ஊா்க்காவல் படையினா் உள்பட 18,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இதேபோல ஆவடி மாநகர காவல்துறையின் சாா்பில் 300 ஊா்க்காவல் படையினா் உள்பட 3,800 போலீஸாரும், தாம்பரம் மாநகர காவல்துறையின் சாா்பில் 350 ஊா்க்காவல் படையினா் உள்பட 3,650 போலீஸாரும் என மொத்தம் 25,950 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்ட 17 வழித்தடங்களில் வழியாக மட்டும் கொண்டு வர வேண்டும் என சிலை வைத்த அமைப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை கரைக்கும் இடங்களில் தாற்காலிக கட்டுப்பாட்டு அறைகள்,உதவி மையங்கள்,ராட்சத கிரேன்கள்,படகுகள்,கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

வழிபாட்டு இடங்கள், ஊா்வல பாதைகள்,சிலைகளை கரைக்கும் இடங்கள் ஆகியப் பகுதிகளில் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீதும்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவா்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com