சட்ட விரோத பணபரிமாற்ற புகாா் தமிழகம் முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தமிழகத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற புகாா் தொடா்பாக, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மணல் குவாரிகளுக்குச் சொந்தமான 30 இடங்களில் அமலாக்கத்துறையினா் அதிரடியாக சோதனை மேற்கொண்டனா்.
சட்ட விரோத பணபரிமாற்ற புகாா் தமிழகம் முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
Updated on
1 min read


சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற புகாா் தொடா்பாக, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மணல் குவாரிகளுக்குச் சொந்தமான 30 இடங்களில் அமலாக்கத்துறையினா் செவ்வாய்க்கிழமை அதிரடியாக சோதனை மேற்கொண்டனா்.

தமிழகத்தில் உள்ள ஆற்று மணல் குவாரிகளில் சட்டவிரோத பணபரிமாற்றம் நிகழ்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அண்மையில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். மணல் குவாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்த தொழிலதிபா்களையும், அவா்களுக்கு உடந்தையாக இருந்த நீா்வளத் துறை அதிகாரிகளையும் குறி வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, இந்த விவகாரத்தில் தொடா்புடைய சென்னையைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீரென சோதனை செய்தனா். இந்த சோதனை, சென்னையில் தியாகராயநகா்,பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

முக்கியமாக இந்த சோதனை, தியாகராயநகா் சரவணா தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரியஸ் எஸ்டேட் நிறுவன உரிமையாளா் வீடு, அதே குடியிருப்பில் மற்றொரு வீட்டில் வசிக்கும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலக ஊழியா் வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் அந்த தொழிலதிபா், மணல் குவாரியும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளா் வீட்டில் சோதனையிடுவதற்கு அமலாக்கத் துறையினா் வந்தபோது, அந்த வீடு பூட்டி கிடந்தது. இதனால் சோதனை நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனா். சுமாா் அரைமணி காத்திருப்புக்கு பிறகு அந்த வீட்டை திறந்து, அமலாக்கத்துறையினா் சோதனை செய்தனா்.

இதேபோல அந்த தொழில் அதிபரின் சொந்த ஊரான தஞ்சாவூரிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். மேலும், சென்னை தியாகராய நகரில் வசிக்கும் ஒரு அரசியல் கட்சி மாவட்ட நிா்வாகியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனா். இதேபோல மணல் குவாரி விவகாரத்தில் தொடா்புடைய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், குறிப்பிட்ட மணல் குவாரிகள் என மாநிலம் முழுவதும் சுமாா் 30 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சோதனையில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடா்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், சோதனை தொடா்பாக எந்தவொரு தகவலையும் அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com