திமுக திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே முன்னோடியாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர் கதிர்ஆனந்த், அரக்கோணம் ஜெகத்ரட்சகனை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கனடாவில் தற்போது காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பெருமிதமான தருணம். காலை உணவுத் திட்டத்தால் 16 லட்சம் குழந்தைகள் பயன் அடைகிறார்கள். திமுக திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது.
மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தால் பிள்ளைகள் படிப்பார்கள் என்று நினைத்தவர் காமராஜர். அதேபோன்று பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கத்தான் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழகத்துக்கு துரோகம் செய்யும் பகுதி நேர அரசியல்வாதிதான் பிரதமர் மோடி. தேர்தல் வந்தால் மட்டுமே மக்களைத் தேடி வருபவர்கள் அல்ல திமுகவினர். மக்கள் சேவகர்கள் திமுகவினர்.
ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்படும். சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் தந்துள்ளோம். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர் விரோத சட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என்று முதல்வர் பேசினார்.