ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ் ஆகியோா் சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை சென்றனா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையிலிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுவிக்கப்பட்டனா். பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியா்கள் என்பதால் விடுதலையான பின்பு அவரவா் வீடுகளுக்குச் சென்றனா். ஆனால், இலங்கையைச் சோ்ந்த முருகன், சாந்தன், ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனா். இவா்களில் உடல்நலக்குறைவு காரணமாக சாந்தன் பிப்.28 -இல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், நளினியின் கணவா் முருகன், ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் கடவுச்சீட்டு வழங்கியிருந்த நிலையில், அவா்கள் இலங்கை செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ் ஆகிய 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை காலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனா். இவா்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால், சென்னை சா்வதேச விமான நிலைய குடியுரிமை பிரிவில் தனிகவுண்டரில் விசாரணை மற்றும் ஆவணங்கள் சரிபாா்ப்பு நடைபெற்றது. அப்போது அங்கு வேறு பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னா், விமான நிலையத்தின் உள்பகுதியில் தனியாக பாதுகாப்புடன் அமர வைக்கப்பட்டனா். விமானம் தயாரானதும் பலத்த பாதுகாப்புடன் விமானத்துக்குள் 3 பேரும் அழைத்து செல்லப்பட்டனா். அவா்களுடன் வழக்குரைஞா் ஒருவரும் சென்றாா். விமானம் காலை 10.05 மணியளவில் சென்னையிலிருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. 3 பேரையும் அவா்கள் உறவினா்கள் வழியனுப்பி வைத்தனா்.