சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் பயணக் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சனி, ஞாயிறுடன் சேர்த்து மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு நேற்றுமுதல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக தமிழக அரசு தரப்பில் சிறப்புப் பேருந்துகளும், ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கோவை செல்லும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்து விற்பனையாகி வருகின்றது.
வழக்கமாக கோவைக்கு ரூ.3,500 வரை விற்பனை செய்யப்படும் விமான பயணச்சீட்டு தற்போது ரூ.17,000 வரை விற்பனையாகிறது.
அதேபோல், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் ரூ.12,000 வரை விமான டிக்கெட் விற்பனை தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
திருச்சிக்கு ரூ.2,500-க்கு விற்கப்படும் டிக்கெட் கட்டணம், ரூ.8,500-க்கும், சேலத்துக்கு ரூ.5,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், விமானப் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேபோல், சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் அதிகரித்துள்ளது.