தமிழகத்தில் வெப்ப அலை வீசவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்துக் கொண்டுள்ளது.
தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், வடக்கு கர்நாடகம், கிழக்கு மத்திய பிரதேசம், கிழக்கு உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.
மேலும், டெல்டா மற்றும் வடதமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கவுள்ளது. தமிழக உள்மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாக வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெப்பஅலை வீசும் என்பதால் பொதுமக்கள் அசௌகரியமான சூழலை எதிர்கொள்ளலாம். வெய்யிலில் செல்லும் முதியவர்கள், குழந்தைகள் குடை மற்றும் தண்ணீர் கட்டாயம் எடுத்துக்கொண்டு செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.