தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கே.கே. நகருக்கு கடந்த புதன்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் இருந்து இருக்கை கழன்று விழுந்ததில் நடத்துநா் காயமடைந்தாா். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பல, மோசமான நிலையில் இருப்பதாக புகார்களும் எழுந்தன.
அரசுப் பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார் எழுந்த நிலையில், போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் இயங்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்து, குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்துத் துறை செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.