தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையோரிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏப். 6-ஆம் தேதி தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டபோது திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நாகேந்திரனின் காா் ஓட்டுநா் சதீஷ் மற்றும் உதவியாளா்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணம் தொடா்பாக விளக்கம் அளிக்க நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் தாம்பரம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா். அதன்படி ஏப்ரல் 22-ஆம் தேதி நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேரில் ஆஜராக நயினார் நாகேந்திரன் தரப்பில் காலஅவகாசம் கோரிய நிலையில், இரண்டாவது முறையாக மே 2-ஆம் தேதி ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை அண்மையில் உத்தரவிட்டது.
தாம்பரம் காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கின் ஆவணங்கள் நேற்று ஒப்படைக்கப்பட்ட நிலையில், செல்வாக்கை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.