
பட்டுக்கோட்டை நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் ரூ. 6.54 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பட்டுக்கோட்டை நகராட்சியில் ஆணையராக குமரன் பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமையில் (ஆக. 2) மாலை 4:30 மணியளவில் நடைபெற்ற பட்டுக்கோட்டை நகராட்சியின் அவசரக் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நகர மன்ற உறுப்பினர்கள் சென்ற பிறகு நகராட்சி அதிகாரிகளை வைத்து, ஆணையர் குமரன் கூட்டம் நடத்தியுள்ளார்.
நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசர கூட்டத்தில் வீட்டுமனை சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் ஆய்வாளர்கள் அருண் பிரசாத், சரவணன் , பத்மாவதி மற்றும் லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் அடங்கிய குழுவானது துணை ஆய்வாளர் ஐயம்பெருமாள் மற்றும் குணசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், நகராட்சி அலுவலகம் மற்றும் ஆணையர் அறையிலும் சோதனை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணைக்கு பின், ஒவ்வொரு அதிகாரிகளிடமும் எழுதி வாங்கிக்கொண்டு வெளியே அனுப்பி உள்ளனர்.
மேலும் சோதனை மேற்கொண்டதில், லஞ்சப் பணமானது உதவிப் பொறியாளர் மனோகரன் என்பவரிடமிருந்து ரூ. 84 ஆயிரம், ஒப்பந்ததாரர் எடிசன் என்பவரிடமிருந்து ரூ. 66 ஆயிரம், ஓட்டுநர் வெங்கடேசன் நகராட்சி வளாகத்திற்குள் தூக்கி வீசிய ரூ. 8000, மேலும் ஆணையாளரின் ஓட்டுநர் வெங்கடேசன் என்பவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 6,54,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.