
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட அறுபடை வீடு ஆன்மீக சுற்றுலா இன்று சுவாமிமலையிலிருந்து தொடங்கியது.
முருகனின் அறுபடை வீடுகளான திச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், ஆன்மீக பயணம் உரிய வசதிகள் செய்து கொடுத்து அழைத்துச் செல்லப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சுவாமிமலை முருகன் கோயிலிலிருந்து, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 204 பக்தர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட மொத்தம் 236 பேர், 6 பேருந்துகளில் அறுபடை வீடுகளுக்கான ஆன்மிக சுற்றுலா இன்று தொடங்கியது.
முன்னதாக, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் எம்பி எஸ்.கல்யாணசுந்தரம் ஆகியோர், பக்தர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி, கொடியசைத்து, ஆன்மீக பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.
அதில் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், துணை மேயர் சு.ப.தமிழழகன், அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் உமாதேவி, கண்காணிப்பாளர் வி.பழனிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தப் பேருந்து, திருத்தணி சென்றடைந்து, அங்கு இரவு தங்கி, காலையில் திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் மேற்கொண்ட பிறகு, பழநி சென்றடையும். 9 ஆம் தேதி காலை அங்கு தரிசனம் முடித்து விட்டு, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச் சோலை கோயில்களுக்குச் சென்று விட்டு, திருச்செந்தூர் சென்றடையும். 10-ம் தேதி காலை அங்குத் தரிசனம் முடித்து விட்டு, அன்று மாலை மீண்டும் சுவாமிமலை வந்து சேரும் எனக் கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.