
நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) ரத்து செய்யப்பட்டது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசுத் துறைகளில், இணைச் செயலர், இயக்குநர்கள், துணைச் செயலர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்ய, மத்திய அரசு அழைப்பு விடுத்து இருந்தது.
இதனால், இடஒதுக்கீடு பறிக்கப்படுவதாக, காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்தியா கூட்டணிக் கட்சியினர், காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனதா(ராம் விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், நேரடி நியமனத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி! எங்கள் வலுவான இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் மத்திய அரசு நேரடி நியமன முறையைத் திரும்பப் பெற்றிருக்கிறது. ஆனால், மத்திய பாஜக அரசு பல்வேறு வழிகளில் இடஒதுக்கீட்டை அழிக்க முயற்சிப்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தன்னிச்சையான 50 சதவீத இடஒதுக்கீட்டை உடைத்து, பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைகளைக் காக்க இந்திய அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.