
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென் ஜால் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்த பகுதிகளை மத்திய உள்துறை இணை இயக்குநர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்த போது நவம்பர் 30, டிசம்பர் 1- ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, புறநகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய குழுவை தமிழகத்துக்கு அனுப்பி வைத்து, பேரிடர நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி இருந்தார்.
இதைத் தொடர்ந்து மத்திய உள்துறையின் பேரிடர் மேலாண்மைத் துறை இணைச் செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் வேளாண் துறையில் எண்ணெய் வித்துகள் வளர்ச்சிப் பிரிவு இயக்குநர் கே. பொன்னுசாமி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை காலை விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தனர்.
இவர்கள் விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை பார்வையிட்டு, அங்கு சேதமடைந்த விளைபொருள்களைப் பார்வையிட்டனர். விழுப்புரத்தில் பம்பையாற்றுப் பாலம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, சேதங்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி உள்ளிட்ட அலுவலர்கள் சேத விவரங்களைத் தெரிவித்தனர்.
முதல்வர் கோரிக்கை
முன்னதாக, ஃபென்ஜால் புயல் பாதிப்பை சீா்செய்ய ரூ.6,675 கோடி வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று சென்னை வந்த மத்திய குழுவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.