
சென்னையில் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரௌடி அறிவழகனை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஹரி என்கிற அறிவழகன் வயது 28. சரித்திர பதிவேடு ரௌடியான இவர் திமுக பிரமுகர் இடி முரசு இளங்கோ, அவரது உறவினர் பழனி, திவாகர் ஆகியோரை கொலை செய்த வழக்குகள் உட்பட திருத்தணி, சோழவரம், ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளன. கடந்த 6 ஆண்டுகளாக இளங்கோ கொலை வழக்கு மற்றும் பழனி கொலை வழக்குகளில் ஹரி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதால் அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவரது கூட்டாளியைச் சந்திக்க அடிக்கடி ரௌடி ஹரி ஓட்டேரி பனந்தோப்பு பகுதிக்கு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் புளியந்தோப்பு துணை ஆணையரின் தனிப்படை, உதவி காவல் ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையில் திங்கள்கிழமை காலை சென்றுள்ளனர். அப்போது ஹரி அங்கு வந்த நிலையில் போலீஸார் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென ஹரி தான் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து உதவி காவல் ஆய்வாளரை நோக்கி சுட முயன்றுள்ளார்.
அப்போது தற்காப்புக்காக உதவி காவல் ஆய்வாளர் பிரேம் குமார் துப்பாக்கியால் ஹரியின் வலது கால் முட்டிக்கு கீழ் சுட்டு மடக்கிப் பிடித்துள்ளார். உடனடியாக காயம் அடைந்த ரௌடி அருகே உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பிறகு ரௌடி ஹரியை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பிரபல ரௌடி ஹரியின் கூட்டாளியான பிரபல ரௌடி தொப்பை கணேஷ் மற்றும் சேது ஆகியோரின் கூட்டாளி என்பதும் குறிப்பாக பிரபல தாதா ரௌடியான முத்து சரவணனின் எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்றால், குறிப்பிட்ட நபருடன் சாலையில் வீண் தகராறில் ஈடுபட்ட பின்னர் அசந்த நேரத்தில் கத்தியை எடுத்து கொலை செய்வது இவர்களது பாணி என்பதும் விசாரணை தெரிய வந்துள்ளது. குறிப்பாக தற்போது இவர்களது எதிர் தரப்புகளான ரௌடிகள் சூழ்ச்சி சுரேஷ் மற்றும் முருகேசன் ஆகியோரால் ஹரியின் உயிருக்கு ஆபத்து என்பதால் ஹரி, பிகார் மாநிலத்திற்கு சென்று 35 ஆயிரத்து 500 ரூபாய்க்கு கள்ளத்துப்பாக்கியை வாங்கி வைத்துள்ளார்.
பின்னர் அவரது கூட்டாளியை சென்னையில் சந்திப்பதற்காக வந்த போதுதான் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கைது செய்யப்பட்ட ரௌடி அறிவழகன் இடம் ஓட்டேரி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துணிச்சலாக துப்பாக்கி சூடு நடத்தி ரௌடியை பிடித்துக் கொடுத்த உதவி காவல் ஆய்வாளர் பிரேம் குமாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெருவித்தும் வருகின்றனர்.
மேலும் ஏற்கெனவே கடந்த 2023 ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடந்த திருட்டு வழக்கில் தலைமறைவான குற்றவாளி மேக நாதனை பிராட்வே அருகே சுமார் இரண்டு கிலோமீட்டர் பட்டப் பகலில் ஓடிப் பிடித்து கைது செய்த போது உதவி ஆய்வாளர் பிரேம் குமாருக்கு காவல்துறை மத்தியில் பெரிதும் பாராட்டுப்பட்டும் கிடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.