

ராமேசுவரம்: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 17 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று(டிச. 23) 383 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு கச்சத்தீவு – நெடுந்தீவுக்கு இடையே அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது, 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். அத்துடன் அந்தோணி ஆரோன் மற்றும் பூண்டி ராஜ் ஆகியோரது இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர்.
அந்த படகுகளில் இருந்த
இருதயம்,
ஆரோக்கியராஜ்,
அந்தோணி அடிமை,
முனியாண்டி,
ஜெகநாதன்,
ராமன்,
ராமச்சந்திரன்,
பூண்டிராஜ்,
அமல்ராஜ்,
யாக்கோபு,
கிருபாகரன்,
அருள் தினகரன் உள்பட 17 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
இதனைதொடர்ந்து, மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவர்களை சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை நீதிவியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.