ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு நிலங்களை அபகரித்ததாகவும், தனியாருக்கு விற்றதாகவும் ஜாா்க்கண்ட் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் மீது சுமார் ரூ.600 கோடி நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உள்பட 14 போ் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய ஏழு சம்மன்களுக்கு ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.
கடந்த ஜன. 20-ஆம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. ஜன. 27-ஆம் தேதி தில்லி சென்ற சோரனிடம் விசாரணை நடத்த அவரின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் 13 மணி நேரம் காத்திருந்தனர்.
அங்கு சோரன் இல்லாததால் ரூ.36 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ காா், சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணையிலிருந்து தப்பிக்க தில்லியிலிருந்து ஜாா்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு உள்ள அவரது இல்லத்துக்கு வந்த சோரனிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தவுடன் அமலாக்கத்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, எம்பி, எம்எல்ஏக்களுக்கான ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான சோரனை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துரை மனுத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.