தஞ்சாவூர்: தஞ்சாவூர் முன்னாள் எம்.பி. கு. பரசுராமன் (63) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை ரஹ்மான் நகரைச் சேர்ந்த இவர் அதிமுகவில் நீண்ட காலமாக இருந்து வந்தார். தஞ்சாவூர் அருகேயுள்ள நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வந்த இவர், பின்னர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான டி.ஆர். பாலுவை 1,44,119 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகிய இவர், திமுகவில் இணைந்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்தார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பரசுராமன் செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது இறுதி ஊர்வலம் இவருடைய இல்லத்தில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.